மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஷ்வினி சவுபே 
செய்திகள்

33 மாநிலங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ளன- மத்திய அரசு தகவல்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 33 மாநிலங்கள் இணைந்திருப்பதாக மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி தெரிவித்தார்.

மாலை மலர்

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும்.

மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் இணைந்து, மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

33 மாநிலங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களும் இணைந்துள்ளன. ஒடிசா, தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேற்கு வங்க மாநிலம் இந்த திட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விலகி விட்டது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 3 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அவர்களுக்கு இ-கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.