செய்திகள்

உ.பி: மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 53 சதவீதம் வாக்குப்பதிவு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 53 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 53 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 22-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார்  52.59 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதேபோல், 25 மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த 24-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், 26 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை போலீசார் விரைந்து சென்று தடியடி நடத்தி கலைத்தனர். இறுதியில், உபியில் 53 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சுமார் 3 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், பழுது ஏற்பட்ட 503 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.