தியாகருதுகம்:
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ளது சூலாங்குறிச்சி. இங்கு செல்லியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் பூசாரியாக வெங்கடேசன் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். நேற்று இரவு கோவில் பூசாரி வெங்கடேசன் பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் பொட்டு தாலியையும், 4 கிராம் வெள்ளி கண்மலரையும், அம்மன் கையில் இருந்த ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி சூலாயுதத்தையும் கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்த நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை பூசாரி வெங்கடேசன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தியாகதுருகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
கோவிலில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.