துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் பேஸ்புக் 
செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ நீக்கம், வன்முறைக்கு இங்கு இடமில்லை - பேஸ்புக்

ஜாமியா பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ உடனடியாக நீக்கப்பட்டு விட்டதாகவும், இங்கு வன்முறைக்கு இடமில்லை எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே பகுதியில் இன்று குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக எதிராக போராட்டம் நடைபெற்றது. 

இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

அப்போது போராட்ட கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் காயமடைந்தார்.

இதற்கிடையில், ஜாமியா துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இந்த கொடூர செயலை தனது பேஸ்புக் பக்கத்தில் ’லைவ்’ செய்துள்ளார். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்க்கு பேஸ்புக்கில் 3600-க்கும் அதிகமான எண்ணிக்கையில் நண்பர்கள் இருந்ததால் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த பேஸ்புக் நிர்வாகம் தங்கள் இணையதள பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை உடனடியாக நீக்கியது. 

இதுதொடர்பாக இந்தியாவுக்கான பேஸ்புக் நிர்வாக செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பேஸ்புக்கில் இடமில்லை. 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பேஸ்புக் கணக்கை நாங்கள் உடனடியாக நீக்கிவிட்டோம். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு செயலையோ, அந்த நபரையோ ஆதரிக்கும் அனைத்துக் கருத்துகளும் கண்டறிந்து உடனடியாக பேஸ்புக்கில் இருந்து அவை நீக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.