திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் அனைவரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது.
இதில் சாதாரண காய்ச்சல், உடல் உபாதைகள், சாதாரண விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 72 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு மருத்துவர் 2 செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 31 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் மேற்படிப்புக்காக சென்றுவிட்டனர். இதனால் 31 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே சிகிச்சை அளிக்கும் நிலைமை உள்ளது. நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்கள் பரவி வருவதாலும், போதிய மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாததாலும் பெரும்பாலானோர் திருவள்ளூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் முதல் உதவி சிகிச்சை பெற முடியாமல் நீண்ட தூரத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 31 மருத்துவர்கள் மேல் படிப்புக்காக சென்றுள்ளனர். மருத்துவர்கள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவசர தேவைக்கேற்ப மாற்றாக அருகில் உள்ள மருத்துவர்கள் கூடுதலாக கவனிப்பார்கள்’ என்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடத்திற்கு உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.