செய்திகள்

தேனி அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த பெண்ணிடம் கொள்ளை

தேனி அருகே பெண்ணிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தேனி:

தேனி அருகே சடையபட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி பவுன்தாய் (வயது 35). பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த வாலிபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பவுன்தாயிடம் கார்டைப் பெற்று ஏ.டி.எம். மையத்தில் ரூ.15 ஆயிரத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். சிறிது தூரம் நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் திடீரென பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில தப்பி ஓடி முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பவுன்தாய் திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். அந்த வாலிபரை விரட்டி பிடித்து பழனிசெட்டிபட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் போடியைச் சேர்ந்த ஈஸ்வரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.