செய்திகள்

தேனி அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளை கும்பல்

தேனி அருகே கோவில் உண்டியலை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் புலிக்குத்தி கிழக்குத் தெருவில் பெருமாள் சாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் கோவில் உண்டியலை பணத்துடன் திருடிச் சென்றது.

மறுநாள காலை கோவிலுக்கு வந்த நிர்வாக குழுவினர் உண்டியல் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

தேனி அருகே வீரபாண்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 21) இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

தேனி அருகே வீரபாண்டி வயல்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 45). இவரது மனைவி வீரமணி (வயது 39). இருவரும் அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு தேனி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

ஜக்கம்மாள் கோவில் அருகே வந்த போது இவர்களை பைக்கில் பின் தொடர்ந்த கொள்ளையர்கள் வீரமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கர்ணன் செல்போனையும் பறிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பிடித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் பதட்டமடைந்து தப்பி ஓட முயன்றனர்.

இதில் தம்பதிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். படுகாயமடைந்த கர்ணன் மற்றும் வீரமணி தேனி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.