செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ - திருப்பூரை சேர்ந்த தாய், மகள்கள் உயிர் தப்பினர்

குரங்கணி மலைபகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற திருப்பூரை சேர்ந்த தாய், மகள்கள், டிரைவர் உயிர் தப்பினர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்தவர் சக்திகலா. இவர் யோகா சென்டர் நடத்தி வருகிறார். இவரது மகள்கள் சாதனா(13), பாவனா(12) உள்பட 6 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறுவர்கள் என 12 பேர் மலையேற்ற பயிற்சிக்காக கடந்த வெள்ளிக்கிழமை தேனி புறப்பட்டனர்.

நேற்று 12 பேரும் குரங்கணி மலைபகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனர். மதியம் 3 மணிக்கு மேல் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த திருப்பூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் மற்றும் சக்திகலாவின் குழந்தைகளான சாதனா, பாவனா ஆகியோர் மலையை விட்டு கீழே இறங்கினர். அப்போது தான் காட்டுத்தீ ஏற்பட்டு பலர் சிக்கி கொண்டனர். மேலும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் புகைமூட்டம் அதிகளவில் இருந்தது.

இதையடுத்து ராஜசேகர் 2 குழந்தைகளுடன் பத்திரமாக கீழே இறங்கினார். அவர் திருப்பூரில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு நான் பத்திரமாக இருக்கிறேன் என்றும், தன்னுடன் சக்திகலாவின் 2 குழந்தைகளும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் சாப்பிட கீழே இறங்கினோம். பின்னர் மீண்டும் மலைக்கு செல்ல முயன்றபோது காட்டுத்தீ ஏற்பட்டு புகைமூட்டம் அதிகமானதால் மேலே செல்ல முடியாமல் பத்திரமாக கீழே இறங்கியதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையே சக்திகலாவும் காயமின்றி மீட்கப்பட்டுள்ளார். தாய்-மகள்கள் உள்பட 4 பேரையும் திருப்பூர் அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #tamilnews