கைது 
செய்திகள்

தேனி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மஞ்சளாற்றுப்படுகையில் இருந்து மாட்டு வண்டியில் சிலர் மணல் அள்ளி வந்தனர். போலீசார் சுற்றி வளைத்த போது தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவர் பிடிபட்டார்.

கணேசன், ரமேஷ், ராஜேந்திரன், பால்பாண்டி, செல்லபாண்டி, வேங்கையன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (33) என்பவர் சாக்கு மூட்டையில் மணல் அள்ளி வந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல ஜங்கால்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பூதநாராயணன் (வயது 50) என்பவரும் மணல் திருடி வந்த போது கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (55) மணல் எடுத்து வந்தது தெரிய வரவே அவரை கைது செய்தனர். கண்ணன், பால்பாண்டி, மருதை, பிச்சைமணி, ராஜேஷ் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.

SCROLL FOR NEXT