ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மணிமேகலை, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க சென்றார். தனது 2 குழந்தைகளுடன் ஒரத்தநாடு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு சென்றார். இந்த நிலையில் தஞ்சையில் இருந்து இன்று காலை மணிமேகலை ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது பற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.