செய்திகள்

புதுவையில் 16-ந் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும்- திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று புதுவை திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் லக்கி பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசிடம் சினிமா தியேட்டர்களின் டிக்கெட் வரியில் 25 சதவீத கேளிக்கை வரியை 1-7-2017 வரை செலுத்தி வந்தோம். சரக்கு மற்றும் சேவை வரி அமுலான பிறகு மத்திய, மாநில அரசின் உத்தரவுப்படி, மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியாக 28 சதவீதம், மாநில அரசுக்கு 25 சதவீதம் என மொத்தம் 53 சதவீதம் கட்டுகிறோம்.

ஆனால், இதனை சினிமா வினியோகஸ்தர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மாநில அரசுக்கான கேளிக்கை வரியை தனியாக செலுத்த முடியாது என கூறிவிட்டனர்.

இது தொடர்பாக, புதுவை அரசிடம் ஆணை பெற்றால் மட்டுமே, புதுவையில் சினிமா படம் ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என, தெரிவித்தனர்.

அதையடுத்து, மாநில அரசின் கேளிக்கை வரி 25 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில், மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றும் வரை, வரும் 16-ம் தேதி முதல், புதுவையில் உள்ள 12 தியேட்டர்கள் மூடப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.