திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது.
வடகிழக்கு பருவமழை கேரளாவில் அடுத்த 3 நாட்களில் தொடங்கும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யுமென்றும் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் மழை பெய்யும்போது கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்புக்குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறையினரும் மாநிலத்தில் உள்ள அணைகள், குளங்களை கண்காணித்து வருகிறார்கள்.