திண்டுக்கல்:
திண்டுக்கல் கோபால்நகரில் மக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீர் தொட்டி அமைத்து 3 ஆண்டுகள் ஆகியும், அதன்மூலம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.
இதையடுத்து தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, தலைவர் விஷ்ணுவர்த்தன், நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தண்ணீர் தொட்டிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக சுவரொட்டிகளையும் ஒட்டினர். பின்னர் தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர்.