நீதிமன்றம் 
செய்திகள்

பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் அருகே உள்ள ஆலடி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவரும் 19 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை ராஜேஷ் பாலியல் வல்லுறவு செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார்.

இதை தொடர்ந்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேசிடம் அவர் கூறினார். ஆனால் ராஜேஷ் மறுத்து விட்டார்.

இதுகுறித்து அந்த பெண் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எழிலரசி விசாரித்து, ராஜேசுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.