செய்திகள்

ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் - தங்க தமிழ்செல்வன்

ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி குறித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஏற்கனவே அறிவித்து விட்டார். எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துஅவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கி விட்டோம். இரு கட்சியுடன் பேசிக் கொண்டுள்ளோம். இன்னும் இரண்டு நாளில் கூட்டணி இறுதியாகி விடும்.

நாங்கள் 38 தொகுதிகளில் போட்டியிடுவோம். தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின் தலைமை வெற்றிடமாக உள்ளது. புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தினகரனை மக்கள் விரும்புகின்றனர். அந்த நம்பிக்கையில் தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் நலன் கருதியே தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக எம்.எல்.ஏ. இல்லாமல் ஆண்டிப்பட்டி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால் ஆண்டிப்பட்டி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan