சேலம்:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரி கள், டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.
விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜராகி சாட்சியம் அளித்த போது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்தனர் என்று கூறி இருந்தார்.
இதை அமைச்சர் தங்க மணி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு. உயர் அதிகாரி பொறுப்பில் இருந்த ஒருவர் பொய்யான குற்றச்சாட்டை கூறுவது ஏற்புடையதல்ல.
யாரையோ திருப்திப்படுத்த உயர் பொறுப்பில் உள்ளவர் பொய்யான குற்றச் சாட்டை கூறியுள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட போது நான் ராசிபுரத்திலும், வேலு மணி திருமண நிகழ்விலும் இருந்தோம்.
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல ராமமோகன்ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். #Jayalalithadeath