செய்திகள்

பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கைகளை ஏற்க முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ

ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. விரும்பி வந்தால் ஏற்று கொள்வோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்

மதுரை:

தேனி மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும் எம். எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் ஆசை.

இதற்காகவே நாங்கள் ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறோம்.

ஆனால் பன்னீர்செல்வம் அணியினர் ஒதுங்கியே இருந்து வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.

நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம். இதுதான் தமிழக முதல்வரின் விருப்பமும் கூட. இதற்காக அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் ஏற்க முடியாது.

பன்னீர்செல்வம் அணியினர் விரும்பி வந்தால், சகோதர மனப்பான்மையுடன் ஏற்போம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக மதுரை வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் பன்னீர்செல்வம் எதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் போகிறார்? என்று தெரியவில்லை.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.