செய்திகள்

குஜராத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: தமீமுன் அன்சாரி பேட்டி

பா.ஜ.க.விற்கு குஜராத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளனர் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி கூறினார்.

மாலை மலர்

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள நீடுர் வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நாகரீகத்தை கடை பிடிக்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் இணக்கமாக பழகி வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தகட்சிக்கும் ஆதரவு இல்லை. இரட்டைஇலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாலும் அதற்கு நாங்கள் அடிமையில்லை. எங்கள் கட்சிக்கு என்று கொள்கை, கோட்பாடுகள் உள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக்கும் தற்பொழுது நடைபெறும் ஆட்சிக்கும் அதிக வித்தியாசம் உள்ளது, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்காக தொண்டாற்றி, பல சேவைகள் செய்தபின்புதான் மக்கள் அவர்களை அங்கீகரிப்பார்கள்.

மத்திய அரசு தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்காக வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை பயன் படுத்துகிறது. பா.ஜ.க.விற்கு குஜராத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளனர், இது இந்தியாமுழுவதும் எதிரொலிக்கும், முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு திசைதிருப்புகிறது, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து என்பது உடனடியாக கிடைப்பதில்லை.

திருமாவளவன் பேசாத ஒன்றை பேசியதாக சித்தரித்து அவரது தலைக்கு விலைவைத்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. சங்பரிவார் அமைப்பின் தீவிரவாதம் எவ்வாறு தலை விரித்தாடுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஷாஜகனர் மற்றும் கட்சியினர் உடனிருந்தார்.