செய்திகள்

பா.ஜனதாவுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் - தம்பித்துரை

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP

மாலை மலர்

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.

தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.

ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் சமுதாயம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை திராவிட கட்சிகளால்தான் காப்பாற்ற முடியும். தேசிய கட்சிகளால் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP