திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தம்பிதுரை மக்களை சந்தித்து குறைகள் கேட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்திருப்பது சரியான நடைமுறை இல்லை. பிரதமராக உள்ள ரணில்விக்கிரமசிங்கிற்கு போதிய மெஜாரிட்டி இருக்கும்போது ராஜபக்சேவை நியமனம் செய்திருப்பது ஜனநாயக விரோத செயல். 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. இவர் மீண்டும் பதவிக்கு வந்துள்ளதால் உலகத்தில் உள்ள தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவல் குறித்தும், அது தொடர்பான நடவடிக்கை குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.
அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் எம்.எல்.ஏ.க்களே இல்லை என அறிவித்தபிறகு தாராளமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தலாம். அவர்களால் அ.தி.மு.க. ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.