விபத்து பலி 
செய்திகள்

தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விபத்தில் பலி

தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவாசல்:

திட்டக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் இந்திரஜித் (வயது 20). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக விடுமுறையில் வீட்டில் இருந்த இந்திரஜித் தனது நண்பர்களை காண, மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். தலைவாசல் அருகே சார்வாய் புதூர் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சறுக்கியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இந்திரஜித் பலியானார்.

இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.