செய்திகள்

தைப்பூச விழாவுக்காக மதுரை-பழனிக்கு சிறப்பு ரெயில்

தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

பாதயாத்திரைக்கு பிரசித்திப்பெற்ற இவ்விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முருகப்பக்தர்கள் விரதம் இருந்து பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக பல நூறு மைல்கள் கடந்து பழனிக்கு வருகிறார்கள்.

இந்த விழாவில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இவ்விழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஏராளாமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப்பயணத்திறக்கு ரெயில் பயணம் செய்வதே வசதியாக உள்ளது.

தற்போது பழனி வழியாக பாலக்காடு- சென்னை அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில், மதுரை - கோவை பயணிகள் ரெயில் என 3 ரெயில்கள் மட்டுமே பழனி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த ரெயில்கள் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான ரெயில்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த மாதத்திலிருந்தே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போதுமான ரெயில்கள் இயக்கப்படவில்லை, இதன் காரணமாக ரெயில்களில் பயணிகள் இருக்க இடமின்றி பார்சல் வேன்களிலும் நின்று சென்றனர். கூடுதல் பெட்டிகளை சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி வருகிற 20, 21 ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

நாளை (20- ந்தேதி) அன்று காலை 8.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் பயணிகள் ரெயில் காலை 11.15 மணிக்கு பழனிக்கு வந்து சேருகிறது. அதே ரெயில் இரவு 8.00 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. 21- ந்தேதியும் இதே போல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே மதுரை கோட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.