செய்திகள்

தமிழகத்தை அ.தி.மு.க. அணியினர் மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டனர்: தா.பாண்டியன்

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அ.தி.மு.க. அணியினர் ஆதரவு தெரிவித்ததன் மூலம் தமிழகத்தை அவர்கள் மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டனர் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மாலை மலர்

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க. ஆட்சிப்பிடித்துவிடும் என அதன் தலைவர்கள் அறிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு நாளும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க போவதில்லை. தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது அதனை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் பா.ஜ.க.வை நுழைய விடாமல் தடுப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். அதன் முதற்கட்டமாக கன்னியாகுமரியிலிருந்து நெல்லை, ராமநாதபுரம், மதுரை வழியாக மத்திய அரசுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வு வாகனம் திருச்சியை வரும் 5-ம் தேதி சென்றடைந்தவுடன் அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. என்ற வரியால் பொருட்களின் விலைகள் அதிகரித்து பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். இதனை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜ.க. ஆதரவு கோரியவுடன் மூன்று அ.தி.மு.க. அணியினரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தை அவர்கள் மத்திய அரசிடம் அடமானம் வைத்து விட்டனர்.