செய்திகள்

அதிமுக அரசு மோடிக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது- தா.பாண்டியன் பேட்டி

மாநில உரிமையை பாதுகாக்க வேண்டிய அதிமுக அரசு மோடிக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார். #thapandian #admkGovernment #pmmodi

மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனாலும் மோடி அரசு இதை அலட்சியப்படுத்தி உள்ளது.

தமிழக மாணவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு மாநில உரிமையை பேணிபாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த அரசு மத்திய அரசுக்கு பக்க வாத்தியம் வாசித்து வருகிறது.

கேரளாவில் மாணவர்களுடைய கல்விக்கடனை அந்த மாநில அரசே ஏற்றுள்ளது. இதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்.

கேரளாவில் பத்மநாத சுவாமி கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உள்ளனர். இதே போல் தமிழகத்திலும் சமூக புரட்சி திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்காக தி.மு.க.வோடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #thapandian #admkGovernment #pmmodi

SCROLL FOR NEXT