செய்திகள்

பாகிஸ்தானில் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாதிகள் 10 பேர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ், உள்ளூர் காவல்துறை, எலைட் போர்ஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் சியோவால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த ஊருக்குள் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவோ அனுமதிக்கவில்லை.

பல மணி நேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. 116 பழைய மாடல் மொபைல்களும் சிக்கின. கைது செய்யப்பட்ட நபர்கள் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படைகளின் பணியை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.