செய்திகள்

தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்து, மினி லாரி மோதி விபத்து: 6 பெண்கள் உட்பட 10 பேர் பலி

தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் அரசு பேருந்தும், மினி லாரியும் மோதி கொண்ட விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அந்த பேருந்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 60க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

வல்லம் பகுதியில் உள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே தஞ்சையில் இருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். மேலும், 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து நடந்த பகுதியில் தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.