ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு கிராமத்தில் குன்னம் அய்யனார் கோவில் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பல்வேறு கிராம மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து திருட முயன்றனர். உண்டியலை உடைத்ததும் அலாரம் அடித்தது. சத்தம் கேட்டு கோவில் பூசாரி மற்றும் கிராம மக்கள் கோவிலுக்கு விரைந்து சென்றனர். கிராம மக்கள் வருவதை கண்ட கொள்ளையர்கள் கோவிலில் இருந்த சிறிய உண்டியலை மட்டும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
சரியான நேரத்தில் கிராம மக்கள் அங்கு வந்ததால் பல லட்சம் ரூபாய் உண்டியல் பணம் தப்பியது.
இது குறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கைரேகை நிபுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.