செய்திகள்

தெலுங்கானாவில் ஆபரேசன் ஸ்மைல்- 2119 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தெலுங்கானாவில் ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 2119 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Hyderabad #Smileoperation

ஐதராபாத்:

தெலுங்கானா அரசு குழந்தை தொழிலாளர்களை மீட்க, ஆபரேசன் ஸ்மைல் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஜனவரி மாதம் 5வது கட்டமாக ஆபரேசன் ஸ்மைல் திட்டம் தொடங்கப்பட்டு, இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுமார் 530 போலீஸ் அதிகாரிகள், குழந்தை நலக் குழுவுடன் இணைந்து இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் குழந்தை நல காப்பகங்களும், என்ஜிஓ நிர்வாகமும் ஒத்துழைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் இதுவரை 466 சிறுமிகள் உட்பட 2119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 274 பெண் குழந்தைகள் உட்பட 1303 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 816 குழந்தைகளின் பெற்றோரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், கோவில்கள், சாலை ஓரங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல் போன்ற இடங்களில் இருந்து பல குழந்தைகளை மீட்டிருப்பதாக ஐஜி சுவாதி லக்ரா தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 2119 குழந்தைகளில் 1653 பேர் ஆண் குழந்தைகள், மற்றும் 466 பெண் குழந்தைகள் ஆவர். இதில் 535 பேர் தெருக்களில் இருந்தும், 340 பேர் தொழிற்சாலைகளில் இருந்தும் , 119 பேர் செங்கல் சூளைகளில் இருந்தும், 51 பேர் பிச்சை எடுக்கும் இடங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை பணிக்கு அமர்த்திய தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #Hyderabad #Smileoperation    

SCROLL FOR NEXT