செய்திகள்

மாணவர்களை தலைகீழாக நிற்க வைத்து, பைப்பால் அடித்த விடுதி வார்டன்

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாத இரண்டு மாணவர்களை விடுதி வார்டன் தலைகீழாக நிற்க வைத்து பைப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் சாகீர்பாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான விடுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர். மேலும் மற்ற மாணவர்களுடன் சண்டை போட்டதால் அவர்களை தண்டிக்கும் விதமாக விடுதி வார்டன் தலைகீழாக நிற்க வைத்துள்ளார். 

தலைகீழ் நிலையிலிருந்து காலை கீழே வைத்த மாணவனை வார்டன் பைப்பால் அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதற்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சாகீர்பாத் மாவட்ட நிர்வாகம் விடுதி வார்டன் யாதையாவிடம் விசாரணை நடத்த மாவட்ட கல்வித்துறைக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த இரண்டு மாணவர்களும் 7-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வார்டன் யாதையா கையாண்ட முறை அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.