செய்திகள்

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க தெலுங்கானா அரசு புதிய உத்தரவு

பள்ளி மாணவர்கள் அதிக எடையுடைய புத்தகப்பைகளை சுமந்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க தெலுங்கானா அரசு புத்தகப் பைகளின் எடை அளவை நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளது

மாலை மலர்

ஐதராபாத்:

ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6 முதல் 12 கிலோ, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 கிலோவுக்கு அதிகமான எடையுள்ள புத்தகப்பைகளை சுமந்து கொண்டு பள்ளகளுக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே முதுகு மற்றும் கால் வலி ஏற்படுகிறது. இதனை மனதில் கொண்டு தெலுங்கானா அரசு, மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பையில் எடையை வயதிற்கு ஏற்றவாறு நிர்ணயித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இதன் மூலம் மாடிகளில் உள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் பயன் பெறுவர்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆரம்பநிலை பள்ளி மாணவர்கள் முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புத்தகப்பை எடையை (புத்தகம் மற்றும் நோட்டுகளுடன் சேர்த்து) கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன் படி, ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஒன்றரை கிலோ எடையுள்ள புத்தகப்பையும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ எடையுள்ள புத்தகப்பையும், ஆறு முதல் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக நான்கு கிலோ எடையுள்ள புத்தகப்பையும், எட்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக நாலரை கிலோ எடையுள்ள புத்தகப்பையும், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அதிபட்சமாக 5 கிலோ எடையுள்ள புத்தகப்பையும் எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த்தது.

மேலும் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது எனவும் தெலுங்கானா கல்வித் துறை அதிகாரி கூறியுள்ளார்.