செய்திகள்

தெலுங்கானாவில் 16 கி.மீ. தூரம் நடந்து வந்து ஓட்டு போட்ட கிராம மக்கள்

தெலுங்கானாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பெறுகொலு கிராம மக்கள் வாக்குசாவடிக்கு 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஓட்டு போட்டுள்ளனர். #TelanganaAssemblyElections

மாலை மலர்

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களை கொண்ட தெலுங்கானா தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானது.

இங்கு ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற 16 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் நடந்து வந்துள்ளனர். ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டம் பெறுகொலு என்ற மலை கிராமம் தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது.

மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டது.

வாகன வசதி இல்லாத பெறுகொலு கிராம மக்கள் ஓட்டு போடுவதற்காக 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போட்டனர்.

காலை 8 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வாக்குசாவடி மையத்தை வந்தடைந்தனர். அக்கிராமத்தில் 56 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.