இளம்பெண்னை எரித்து கொல்ல முயற்சி 
செய்திகள்

இளம்பெண்னை எரித்து கொல்ல முயற்சி- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கச்சிராயப்பாளையம் அருகே நெருப்பில் சத்தியம் செய்ய சொல்லி இளம்பெண்னை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. கூலிதொழிலாளி இவரது மனைவி ஜெயராணி (வயது 30). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ருக்குமணி.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு ருக்குமணியை பற்றி ஜெயராணி மற்றொரு ஆணுடன் தொடர்பு படுத்தி பேசியதாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ருக்குமணி, அவரது மகன் வினோத்குமார், உறவினர் பாபு ஆகியோர் சேர்ந்து ஜெயராணியை பார்த்து  ஏன் தவறாக பேசினாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் தவறாக பேசவில்லை என்று கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ நெருப்பில் சத்தியம் செய்தால் தான் ஒப்புகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் ஜெயராணியின் இடுப்பில் தேங்காய் ஓடுகளை கட்டி தீயை பற்றவைத்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென ஜெயராணியின் உடலில் பற்றி எரிந்தது. வேதனையால் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். 

உடல்கருகிய ஜெயராணியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கரியாலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி ருக்மணி, பாபு, வினோத்குமார்  ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்களில் ருக்குமணியை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள்.