கைது 
செய்திகள்

தக்கலை அருகே ஆசிரியையிடம் கிண்டல் செய்த 3 வாலிபர்கள் கைது

தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் கேலி, கிண்டல் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திரு விதாங்கோடில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அந்த அசிரியையின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல பாதிப்பு காரணமாக இறந்து விட்டார். இதனால் தனது 2 குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். மேலும் விடுமுறை நாட்களில் குரூப் 2 தேர்வு எழுதவதற்காக அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்திற்கும் சென்று வந்தார்.

இவர் வெளியில் செல்லும் போது அவரது வீடு அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு கேலி, கிண்டல் செய்து வந்தனர். அவர்களை ஆசிரியை கண்டித்த போதும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் தனது மாமனாரிடம் அது பற்றி அவர் கூறினார். அவரும் அந்த வாலிபர்களை அழைத்து கண்டித்தார்.

நேற்று காலை ஆசிரியை மோட்டார் சைக்கிளில் தனது வீடு அருகே சென்ற போது அந்த வாலிபர்கள் 3 பேரும் அவரை வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

மேலும் தங்களை பற்றி மாமனாரிடம் புகார் செய்தது பற்றி கேட்டு அவரை மிரட்டி உள்ளனர். இதற்கிடையில் அங்கு வந்த அவரது மாமனார் இதைப்பார்த்து அந்த வாலிபர்களை கண்டித்தார்.

உடனே அந்த வாலிபர்கள் அவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தக்கலை போலீசில் ஆசிரியையின் மாமனார் செல்காரியஸ் புகார்செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி முளகுமூடு பண்டாரகோணம் பகுதியைச் சேர்ந்த மெர்லின்வினோ(வயது22), அனீஸ் (28), அழகிய மண்டபத்தைச் சேர்ந்த ராஜூ(24) ஆகிய 3 வாலிபர்களை கைது செய்தார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த 3 வாலிபர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.