பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாக மங்களா டவுன் சுபாஷ்நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி நாகம்மா. இந்த தம்பதியின் மகள் பவானி (வயது 13). இவள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற பவானியை வகுப்பு ஆசிரியை யசோதா சக மாணவ மாணவிகள் முன்பு அடித்து கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது. இதனால் பவானி மனம் உடைந்தாள்.
மேலும் தனது பெற்றோரிடம் ஆசிரியை யசோதா தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதை கூறி பவானி அழுது உள்ளாள். பின்னர் நேற்று காலை தனது வீட்டில் பவானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகமங்களா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவானியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது பவானியின் உள்ளங்கையில் எனது வகுப்பு ஆசிரியை யசோதா, சக மாணவ மாணவிகள் முன்பு என்னை அடித்து கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள் கிறேன்.
எனது சாவுக்கு ஆசிரியை யசோதா தான் காரணம் என்று எழுதி இருந்தாள். இதையடுத்து பவானியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் நாகமங்களா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நாகமங்களா டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியை யசோதாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை அடித்து கொடுமைப்படுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.