ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தள்ளது.
ஆனால் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு முழுவதும் அ.தி.மு.க. தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவை முடங்கி வருகிறது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியவில்லை.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் தினம் ஒரு வேடம் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தெலுங்கு தேசம் எம்.பி.க்களில் முக்கியமானவரான என்.சிவபிரசாத் விஸ்வா மித்ரர் வேடம், பெண் வேடம் என பல வேடங்களில் வந்த போது அவரது தோற்றம் இயல்பாக இருந்தது.
சிவபிரசாத் எம்.பி. இது வரை ராஜா அரிச்சந்திரன், பெண், பள்ளி மாணவன், மந்திரவாதி, மீனவர், விவசாயி உள்பட 18 வகையான வேடம் அணிந்து போராட்டம் நடத்தினார்.
சிவபிரசாத் சித்தூர் தொகுதி எம்.பி.யாவார். அவர் மேலும் கூறுகையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எனது பள்ளி தோழர். பள்ளியில் நானும், அவரும் நிறைய நாடகங்களில் நடித்து இருக்கிறோம். 1998-ல் அவர் என்னை கட்சியில் சேர்த்து அரசியலில் ஈடுபட வைத்தார்.