விபத்து பலி 
செய்திகள்

தஞ்சை அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

தஞ்சை அருகே அரசு பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வல்லம்:

புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் அருகே உள்ள வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன்.விவசாயி. இவருடைய மனைவி பவுனம்மாள் (வயது35).

பவுனம்மாளின் பெற்றோருடைய ஊர் புதுக்குடி அருகே உள்ள கீழ திருவிழாப் பட்டியாகும். பவுனம்மாளுக்கு புதுக்குடி அருகே உள்ள கீழதிரு விழாப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று இவருடைய நிலத்தில் அறுவடை நடை பெற்றது.

இதற்காக வடக்கிப் பட்டியில் இருந்து நேற்று மொபட்டில் கீழதிருவிழாப் பட்டிக்கு பவுனம்மாள் வந்திருந்தார். வயிலில் அறுவடை முடிந்ததால் நேற்று மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வடக்கிப்பட்டிக்கு செல்வதற்காக தஞ்சை- திருச்சிசாலையில் மொபட்டை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது தஞ்சை புதுக்குடி பிரிவு சாலை அருகே தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் பவுனம்மாள் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவுனம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.