செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக உள்ளது - மத்தியக்குழு தலைவர் பேட்டி

தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் கூறியுள்ளார். #GajaCyclone #CentralCommittee

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மத்திய குழு ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மத்திய குழுவிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

எங்கள் பகுதியில் விசைபடகுகள், நாட்டுப்படகுகள், அதிக அளவில் சேதமாகி உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றனர்.

பின்னர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை இன்று காலை முதல் ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralCommittee

SCROLL FOR NEXT