செய்திகள்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் வாலிபர் அடித்துக் கொலையா?: போலீசார் விசாரணை

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் திருவையாறு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறை பகுதியில் நேற்று இரவு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 30 வயது மதிக்கத்தக்க, ஜீன்ஸ் பேண்ட், அரைக்கை சட்டை அணிந்திருந்த அந்த வாலிபர் உடலை பார்வையிட்டனர். அவர் வாயில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது. பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த வாலிபர் யார்? எப்படி இறந்தார்? அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.