தமிழக செய்திகள்

மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிருப்பு போராட்டம்

மே மாதம் சம்பளம் முழுமையாக கிடைக்கவில்லை, அதனை உடனே வழங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நர்சுகள் மற்றும் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாநகராட்சி மருத்துவப் பணியாளர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே மாதம் சம்பளம் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் வருகை பதிவேடு செயல் முறை திட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்

இதுகுறித்து பணியாளர்கள் கூறும்போது, மருத்துவர்கள், நர்சுகள் வருகை பதிவேடு செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில நிமிடங்கள் தாமதமானாலும் சம்பள பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்த முறையை மாற்ற வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மே மாதம் சம்பளம் முழுமையாக கிடைக்கவில்லை, அதனை உடனே வழங்க வேண்டும் என்று கூறினார்கள். ரிப்பன் மாளிகை நுழைவுப் பகுதியில் மாநகராட்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி சுகாதார அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கமிஷனர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.