சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரை மீது ஏறி சொமேட்டோ ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில் ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த ஊழியர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக்குதிரை மீது கம்பீரமாகச் சென்றுள்ளார்.
அதிகப்படியான போக்குவரத்துக்கு நெரிசலைக் கடந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் குறைக்கும் வகையிலும், சரியான நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகிக்க இந்த மாறுபட்ட முறையை அவர் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குதிரை மீது சென்ற இந்த ஊழியரை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
நெட்டிசன்கள் பலரும் "சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான டெலிவரி முறை" என்றும், "டிராஃபிக் ஜாமுக்குச் சரியான தீர்வு" என்றும் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.