பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை படத்தில் காணலாம். (உள்படம்: கைதான வாலிபர் தயா) 
தமிழக செய்திகள்

ரீல்ஸ் படுத்தும் பாடு... நண்பர்களோடு சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சத்தத்தை கேட்டதும் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விழுப்புரத்தில் வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் மனநிலையையும் எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அது குறித்து பார்ப்போம்...

வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ் (வயது 48). இவர் விழுப்புரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காளிதாஸ். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த கட்டிடத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் அமர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதும் அவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதனை காலி மதுபாட்டிலில் நிரப்பி திரி போட்டு பற்ற வைத்து அந்த வீட்டின் முன்புற சுவற்றில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதில் அந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. இந்த சத்தத்தை கேட்டதும் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தயா (21) மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசியதும், இவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்வதற்காக பெட்ரோல் குண்டு தயாரித்து அதை வெடிக்கச்செய்ததும் தெரியவந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து தயா உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.