காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் ராஜாஜி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள கடைகளுக்கு வரக்கூடிய காய்கறி மூட்டைகளை இறக்குவதற்கு 15-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு முரளி என்பவரும் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பணி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லாமல் மார்க்கெட் அருகிலேயே தங்குவது வழக்கம்.
நேற்று இரவு முரளி வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு காய்கறி மார்க்கெட்டின் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முரளி அந்த பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் சில இடங்களில் வெட்டு காயங்கள் காணப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கணவன் - மனைவி இடையே சொத்து பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அதனால் கொலை நடந்ததா அல்லது மது அருந்தும் போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் வந்து ஆய்வு மேற்கொண்டார். 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.