கொடைக்கானலில் எரிபொருள், கியாஸ், விறகு அடுப்பு, மின்சாரம் போன்ற எதுவும் இல்லாமல் பல்வேறு ஆரோக்கிய உணவுகளை தயாரித்து அசத்தும் பெண்மணி பொதுமக்களுக்கும் இது குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
தற்போது நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுபாடு காரணமாக பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் தேநீர் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. நகர் புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் இது போன்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுப்பில்லாமல் அதிவேக சமையல் என்ற கோணத்தில் புதிய முயற்சியில் கொடைக்கானலை சேர்ந்த கிரிஜா என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவர் பிரபல சமையல் கலைஞர் தாமுவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
தற்போது சிலிண்டர் எரிவாயு தட்டுபாடு காரணமாக பல்வேறு சிரமத்தில் இருந்துவரும் பொதுமக்களுக்கு அதை சமாளிக்கும் விதமாக எந்த ஒரு எரி பொருள்களும் இல்லாமல் தமிழரின் இயற்கை முறையாக காய்கறிகள், சத்தான உணவு மூலப்பொருட்களை கொண்டு எந்த நேரத்திலும் சமைக்கலாம் என்ற கோணத்தில் பிரியாணி, இட்லி, பொங்கல், காபி என 5000 வகையான உணவு வகைகளை அடுப்பில்லாமல் சமைத்து வருகிறார். மேலும் ஒரே நேரத்தில் அதிக படியாக 1500 நபர்களுக்கு சமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தொடர்ச்சியாக 24 மணி நேரம் 30 நிமிடங்கள் சமைத்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 150 உணவு வகைகளை 87 நிமிடங்களில் தயாரித்து புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து எந்த ஒரு கால கட்டத்திலும் அடுப்பில்லாமல் சமைக்கும் முறைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தும் வருகிறார். வீட்டில் எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு ஆரோக்கியமாக சமையல் செய்தும், அவற்றை நாம் உண்ணும் பொழுது இயற்கையாகவே அந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் நன்மைகளை எளிதாக பெற முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற உணவுகளை எளிமையான முறையில் செய்து கொடுத்து பழகினால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது எரிவாயு அடுப்பில்லாமல் குடும்ப தலைவிகள் முதல் ஓட்டல் தொழிலாளர்கள் வரை சிரமப்பட்டு வரும் நிலையில் அடுப்பில்லாமல் பல வகையான உணவுகளை தயாரிப்பது எப்படி என்பது குறித்து கற்றுத் தருகிறார்.