போர் சூழல் உச்சத்தில் இருக்கும் நிலையிலும் | தங்கம் விலை உயராமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பதற்கான முழு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தங்கம் விலை கடந்த 12-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி, தொடர்ந்து 3 நாட்களில் கிராமுக்கு ரூ.360-ம், பவு னுக்கு ரூ.2 ஆயிரத்து 880-ம் குறைந்து இருந்தது.
தற்போது அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் உச்சத்தில் இருக்கிறது. பொதுவாக போர் சூழல் காலங்களில் தங்கம் விலை ‘டாப் கியரில்' எகிறும். ஆனால் இப்போது போர் பதற்றம் அதிகமாக இருக்கும் நிலையிலும் விலை பெருமளவில் உயரவும் இல்லை. பெரும்பாலான நாட்களில் விலை குறைந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள். வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. போர்ச்சூழலால் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் என இரண்டையுமே கருதுகின்றனர். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும்போது. மற்ற நாட்டு நாணயங்களை (ரூபாய் போன்றவை) வைத்திருப்பவர்களுக்கு தங்கம் விலை அதிகமாகத் தெரியும், இதனால் அதன் தேவை குறைந்து விலை கட்டுக்குள் இருக்கிறது.
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கிறது. பண வீக்கம் அதிகரிக்கும்போது. அதைக்கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காமல் நீண்டகாலத்திற்கு உயர்த்திவைக்கக்கூடும். வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது என்பதால் முதலீட்டாளர்கள் அதிலிருந்து விலகுகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. அந்த உச்சநிலையில் இருந்தபோது. பல பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் கையில் இருந்த தங்கத்தை விற்று லாபத்தை ஈட்டத் தொடங்கினர். இந்த விற்பனை அழுத்தம் காரணமாக விலை சரிவைச் சந்தித்தது.
சந்தையில் ஏதேனும் ஒரு நிகழ்வு முன்கூட்டியே கணிக்கப்பட்டால், அதன் தாக்கம் ஏற்கனவே விலையில் பிரதிபலித்துவிடும். அமெரிக்கா- ஈரான் மோதல் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால். அதன் தாக்கம் முன்கூட்டியே தங்கத்தின் விலையில் சேர்ந்துவிட்டது. எனவே போர் தொடங்கியவுடன் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், தங்கம் மீண்டும் ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறி விலை உயரவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.