வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு சட்டத் திருத்தத்தை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையின சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வெளிநாட்டு நிதியை முடக்கும் நோக்கத்தோடும் நியாயமற்ற வகையிலும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவிருக்கிறது.
இந்த நாட்டின் அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை உறுதியளித்துள்ளது. அந்த உரிமையைச் சிதைக்கும் எந்தவொரு முயற்சியையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் அனுமதிக்க மாட்டோம். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இச்சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.