வேலூர்:
விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால், யு.பி.எஸ்.சி. இந்திய வனப் பணி (IFoS) தேர்வில் 110-வது இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சவுரப் குமார் பால். இவர் கடந்த 2022-ம் ஆண்டில் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.
இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்திய வனப் பணி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் சவுரப்குமார் பால் 110-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் மற்றும் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் முன்னாள் மாணவர் சவுரப் குமார் பாலை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
"விஐடி-யின் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது பெரும் பெருமையைத் தேடி தருகிறது.
மேலும் சவுரப் குமார் பாலின் வெற்றி, தொழில்நுட்பப் பின்னணியிலிருந்து வந்து நிர்வாகப் பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்" என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.