விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், இன்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததால் தற்போதுவரை மீட்பு பணி தொடர்கிறது. இதனிடையே மீட்பு பணியின்போது மீண்டும் வெடிவெடித்தது.
இதில் தீயணைப்புத்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் சிலர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தப்பி ஓடிய ஆலையின் உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர்,
“தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி,
“தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருற்றிருப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.