சென்னை:
சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் இருந்து மாம்பலம் ரெயில் நிலைய நடைமேடை பாலத்துடன் இணைப்பதற்காக பாலம் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக ரங்கநாதன் தெரு-ரெயில்வே பார்டர் சாலையில் அரசு நிலத்தில் அமைந்திருந்த விளையாட்டு விநாயகர் கோவில் மற்றும் 22 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதை எதிர்த்து 4 வாடகைதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ராஜசேகர் ஆகியோர், 'கோவில் அமைந்துள்ள நிலம் கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அந்த கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும்' என்று சென்னை மாநகராட்சி, தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டனர்.