தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வேலுமதி அவரது தாயார் கனகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகத்தின் பேத்தி திருமணத்திற்கு வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் அந்த குடும்பம் திருமணத்தை நடத்த வழி தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் 5 நாடு கிராம மக்கள் சார்பில் அந்த குடும்பத்திற்கு உதவுவதற்கு தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் 5 நாடு அம்பலத்தார்கள் கலந்து கொண்டனர்.
இரட்டை கொலை-கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. திருமணத்தை நடத்த 5 நாடு கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிதியுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.