தமிழக செய்திகள்

‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி

ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,

“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது.

ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்

திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.

ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?

தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது

இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை.

அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.

தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது.

விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார்.